உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான அந்த நாளில், பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (08-03-26) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisment

இந்த தினத்தையொட்டி நாளை (07-03-26) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார். இது குறித்து என்.ஆனந்த் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விஜய் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அறிவிக்க உள்ளார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.