சர்வதேச மகளிர் தின விழா நாளை (08-03-26) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்.

Advertisment

இந்த விழாவில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “வெற்றிப் பயணம் திட்டம். கட்டணமில்லா பேருந்து பயணம் என்று  அறிவித்துவிட்டு அது பிங்க் பஸ்ஸில் மட்டும் தான் என்று கட்டுப்பாடு விதித்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட  குறிப்பிட்ட அந்த ஒரு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே அந்த நிலை மாற வேண்டும், மேலும் குடும்பங்களில் ஏற்படும் சூழலால் அவசர மற்றும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும். அது மாதிரியான நேரங்களில் கையில் காசில்லை என்றால் அந்த பயணத்தை கவலையுடன் தவிர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இது போன்ற தர்ம சங்கடமான நிலையை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். இதன் மூலம் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம். மேலும் பேருந்துக்காக காத்து கிடக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. அடுத்தது, ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ் அகைன்ஸ்ட் வுமன். பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும், அதன் அடிப்படையில் தான் ஜீரோ டாலரன்ஸ் கிரைம்ஸ் அகைன்ஸ்ட் வுமன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு நம்முடைய விருப்பம். இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை, விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என இந்த கொடுமைகளில் ஈடுபட்டதே திமுக நிர்வாகி ஒருவரும், திமுக கவுன்சிலர் ஒருவரும் தான் என்பது செய்திகள் வழியாக எல்லாரும் அறிந்த ஒன்று.

Advertisment

இதையெல்லாம் தடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்த படையைச் சேர்ந்த பெண்கள், பாடி கேம்ப் உடன் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில்  இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த பாஸ்ட் ட்ராக் கோர்ட்டுகளில்  பெண்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும். விசாரணை முறையாக நடத்தப்பட்டு தீர்ப்பும் விரைவாக வழங்கப்படும்  இதற்குதான் மகிளா கோர்ட் இருக்கிறதே என்று சில பேர் கூச்சல் போட ஆரம்பிச்சிருவாங்க. ஆனால் இது நம்ம பெண்களுக்காக மட்டுமே.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்ஸ் அறிமுகப்படுத்தப்படும். இந்த பட்டன்கள் 24*7 சென்ட்ரலைஸ்ட் கமண்ட் சென்டர் உடன்  இணைக்கப்பட்டதாக இருக்கும். அந்த பட்டன்கள் தனியார் ஷேர் ஆட்டோக்கள் உட்பட அனைத்து பொது போக்குவரத்து  வாகனங்களிலும் பொருத்தப்படும். இந்த பட்டன்கள் வழியாக ஐந்து நிமிடத்தில்  பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமராக்களும், விளக்குகளும்  வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ்  உருவாக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை 24*7 கண்காணிப்பு செய்ய முடியுமா என்ற கேள்விக்கான பதிலாக ஸ்டேட் ஆப் தி ஆர்ட் கமண்ட் சென்டர்ஸ் அமைத்து சிசிடிவி நெட்வொர்க்களை கண்காணிக்கவும், அவசர நிலைகளை அந்த நேரத்திலேயே  கண்காணிக்கவும், அதற்கான விரைவான பதிலை உறுதி செய்யவும் அதி நவீன கட்டளை மையங்களை அமைத்து பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அடுத்து பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில் பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையெல்லா சானிட்டரி பேட்ஸ் வழங்குவது உறுதி செய்யப்படும். இப்போது இது ஒழுங்காக முழுமையாக செயல்படுத்தவில்லை என்பது நமக்கு நல்லாவே தெரியும்.

Advertisment

அடுத்து சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம். நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி  செலுத்துவதன் மூலமும், பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும், சுய உதவி குழுக்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும். சுய உதவி குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட எம்எஸ்எம்இ-களாக மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்,  அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும். அடுத்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். உலகத்தில் மனுஷனா பிறக்கிறதே பெரிய விஷயம் அதிலும் நம் தாய்நாடான தமிழ்நாட்டில் பிறக்கிறது மிகப்பெரிய வரம். அப்படி நம் தமிழ்நாட்டில் பிறக்கிற  குழந்தைகளை வரவேற்கும் திட்டம்தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும்.  ஊட்டச்சத்து பொருட்கள், பேபி டிரஸ்ஸ், தரமான பேபி சோப்ஸ், பேபி ஆயில், பேபி பவுடர், பேபி கொசு வலைகள், பொம்மைகள், நாப்கின்ஸ் அண்ட் டயப்பர்ஸ்  இவையெல்லாம் அந்த பேபி வெல்கம் கிட்டில் இருக்கும். இதெல்லாம் சும்மா சாம்பிள் தான். இன்னும் ரெடி ஆயிட்டு இருக்கு. வரப்போகிற நாட்களில் அதை நான் உங்களுக்கு நான் சொல்றேன்” என்று கூறினார்.