குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டனியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி நாளை (24.08.2025) தமிழ்நாடு வருகை தர் உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அதோடு இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள உணவகத்தில் (ஓட்டல்) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவுள்ளது.