வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அகமது, காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினரின் காவலில் சித்திரவதை காரணமாக ஷமீல் அகமது இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisment

இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அவரது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பேருந்துகள், காவல் வாகனங்கள், மதுபானக் கடை மற்றும் தனியார் மருத்துவமனையை சேதப்படுத்தினர். மேலும் 70-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக 191 பேர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதன் எதிரொலியாக, திருப்பத்தூர் எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் வேலூர் எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த பதட்டமான சூழ்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இந்த மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டார்.

நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால், இந்நேரத்தில் தீர்ப்பு வெளியாகி பதட்டத்தை உருவாக்கினால், அது தேவையற்ற சமூக-மதப் பதற்றத்தை உருவாக்கும் என்பதால் தீர்ப்பை இரண்டு தினங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.