விவசாய நிலத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (40). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அவ்வப்போது வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டிய தனது விவசாய நிலத்தில் அவரின் கை, கால் கட்டப்பட்டு அருகில் நாட்டு துப்பாக்கியோடு சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில், சடலத்தின் அருகே இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.