முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக மூத்த தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (27-02-26) முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். மேலும் அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஐயப்பனும் ராஜினாமா செய்தார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரிந்த தலைவர்கள் மூலம் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்தனர். இதனிடையே, ஓபிஎஸ் தனி கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அவர் மறுத்ததை அடுத்து அவருடன் இருந்த முக்கிய புள்ளிகள், ஆதரவாளர்கள் என பலரும் விலகி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தனித்துவிடப்பட்டதாகக் கருதப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பதாக ஒவ்வொரு செய்தியாளர்கள் சந்திப்பிலும் ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்தார். அதன் தொடர்ச்சியாக அண்மை காலமாக அவர் திமுகவுடன் இணக்கம் காட்டி வந்தார். இதனால் அவர் திமுகவில் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். நேற்று இரவு வரை ஓ.பன்னீர்செல்வத்துடன் வெல்லமண்டி நடராஜன் இருந்த நிலையில், இன்று திடீரென ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இதனால் திமுகவில் செல்ல மனம் இடம் தரவில்லை என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கிரீன் இல்லத்தில் வெல்லமண்டி நடராஜன் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/vella-2026-02-27-20-00-22.jpg)