மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினமே (19.08.2025) மதுரைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டுத் திடலுக்குத் தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். அதன்படி விடியற்காலையிலேயே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வருகை தந்துள்ள தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று (20.08.2025) மாலை முதல் இந்த பகுதிக்கு வாகனங்களில் கூட்டம் வரத் தொடங்கியது.
இத்தகைய சூழலில் தான் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் மதுரை - தூத்துக்குடி இடையேயான நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே தான் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் இந்த மாநாட்டுப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக த.வெ.க. மாநாட்டிற்காக வரக்கூடிய வாகனங்களுக்குத் தனியாக ஒரு வழி (LANE) ஒதுக்கப்பட்டு கட்டணமின்றி (த.வெ.க. கொடி கட்டிய வாகனங்கள்) அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று உள்ளூர் பொது மக்கள் சிரமமின்றி அந்த பகுதியைக் கடப்பதற்கும் தனியாக வழிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.