திருநெல்வேலியில் ஐ.டி. இளைஞர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாகத் தமிழகம் முழுவதும் இன்று (09.082.2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைச் சிறப்புப் புலனாய்வு குழுவினர் நடத்த வேண்டும். உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பு அடிப்படையில் இந்த விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும். கவின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், “கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளது. இதனை முற்றிலுமாக தடுப்பதற்குத் தனிச் சட்டத்தை இயற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கை உச்சநீதிமன்றம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய அடிப்படையில் மத்திய அரசும் இதற்கான கவனம் செலுத்த வேண்டும்.
இது போன்ற சம்பவங்களால் சாதி மறுப்பு திருமணங்கள் செய்யக்கூடியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுயமரியாதை திருமணங்களுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றியது போல ஆணவப் படுகொலைக்கு எதிராகவும் தனியாகச் சட்டம் இயற்ற வேண்டும் ஆணவ படுகொலை என்பது ஒரு பிரிவினருக்கான சமூகப் பிரச்சினை இல்லை ஒட்டுமொத்த சமுதாய பிரச்சினை ஆகும் ” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் என300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.