திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கடம்பத்துார் ஒன்றியம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பட்டா பெற்ற மக்கள் குமாரசேரி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை அணுகினர். அப்போது அவர் ஆன்லைனின் ஏற்ற ஒருவர் 3 ஆயிரம் ரூபாய் தரவேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 11 பேர் பணத்தை கொடுத்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 51) என்பவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின் நடந்த பேச்சுவார்த்தையில் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்க சம்மதித்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை சிவகுமார் கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ., ஆனந்தவேலுவிடம் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us