மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் முக்கிய பிரச்சார நிகழ்வாக அமைந்துள்ளது.
இந்த நடைபயணம் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. போதைப்பொருள் மற்றும் மது அருந்துதலின் தீமைகளை எதிர்த்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சாதி-மத மோதல்களைத் தடுத்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்.
நடைபயணம் திருச்சியிலிருந்து மதுரை வரை சுமார் 175 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. மணப்பாறை, கொடைரோடு, வாடிப்பட்டி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. வைகோவுடன் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் உடன் நடந்தனர். 82 வயதான வைகோவின் உறுதியான நடை பலரையும் பெரிதும் கவர்ந்தது – மருத்துவர்கள் கூட இந்த வயதில் நடைபயணம் தவிர்க்கச் சொன்ன போதிலும், அவர் தமிழக மக்களுக்காகத் தொடர்ந்தார் என அவரது மகன் துரை வைகோ நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இது வைகோவின் 11வது நடைபயணம் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய பயணங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்டன. இம்முறை திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ஜனவரி 12ஆம் தேதி (இன்று) மதுரை ஒத்தக்கடையில் இந்த நடைபயணம் நிறைவு பெறுகிறது. இதனிடையே மதுரைக்குள் நுழையும் வைகோவிற்கு மதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கக் காத்திருந்தனர். மேளதாளங்கள் முழங்க, கரகாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மதிமுகவினருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/613-2026-01-12-14-40-53.jpg)