அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து, அமெரிக்க நட்பு நாடுகளான பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர்வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் ஹோர்மூஸ் நீரிணையை கடந்து செல்லும், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மூட்டப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 

Advertisment

அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஒபாமாவின் மோசமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை (JCPOA) நான் ரத்து செய்யாமல் இருந்திருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருந்திருக்கும். 

நாம் மேற்கொண்டதிலேயே மிகவும் ஆபத்தான ஒப்பந்தம் அதுதான். ஒருவேளை அது தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால், உலகம் இப்போது முற்றிலும் மாறுபட்ட இடமாக இருந்திருக்கும். இதற்கு நீங்கள் பராக் ஹுசைன் ஒபாமா மற்றும் 'தூக்கக் கலக்க' ஜோ பைடனையும் (Sleepy Joe Biden) தான் குறை சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment