ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்துள்ளதாகவும், இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து பால், நெய், கோதுமை, சோயாபீன்ஸ், ஆப்பிள், திராட்சை, சோளம் உள்ளிட்ட வகைகளை இந்தியாவில் விற்பனை செய்ய அந்த நாடு அனுமதி கோரியதாகவும், இவை அனைத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தாணியங்கள் அதனால் இந்தியாவின் விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்று இந்தியா கூறி அதற்கு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியா பொருட்களுக்கு 25% வரி விதிப்பு அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  

Advertisment

இதனையடுத்து, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதனிடையே, இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்தியா பொருளாதாரம் இறந்து போய்விட்டதாகவும், உலகிலேயே அதிக வரியை இந்தியா விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தார். இந்தியா குறித்து டிரம்ப் விமர்சித்தது குறித்து பிரதமர் மோடி உட்பட எந்த ஒன்றிய அமைச்சரும் பதிலளிக்காமல் மறுத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், கூடுதல் வரியாக 25 சதவீதத்தை உயர்த்தி இந்தியாவுக்கு மொத்தமாக 50% வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரதமர் மோடி சீனா செல்ல உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் 25% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனிடையே, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம், ரஷ்யாவிடம் இருந்து கச்சா இறக்குமதி வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எந்த காரணத்தை கொண்டும் ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இருக்காது தேவைப்பட்டால் கூடுதலாக இறக்குமதி செய்வோம். இந்திய நாட்டு மக்களின் நலனை எங்களுக்கு பிரதானமானது என்று இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது.

Advertisment

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (27-08-25) முதல் 50% வரி விதிக்கப்பட உள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களை வாங்கி வருவது என்பது ரஷ்யா மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரும் அச்சுறுத்தல். இதனை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் வரி தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தப்படி இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு நடவடிக்கை நாளை (27-08-25) அதிகாலையில் இருந்து அமலுக்கு வரவுள்ளதி. இந்த வரி அமலுக்கு வரும் பட்சத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இன்று இந்தியா சார்பில் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.