Upcoming Diwali festival - Update given by Minister Sivashankar Photograph: (dmk)
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், 'தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் செல்ல ஏற்கனவே இரண்டு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அக்.16 முதல் 19 ஆம் தேதி வரை மொத்தமாக தமிழகம் முழுவதும் 20,378 சிறப்பு பேருந்துகள் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 14,268 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 6,110 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. போக்குவரத்து இயக்கம் குறித்து 9445914436 என்ற தொலைபேசி எண்ணை எந்த நேரமும் அழைக்கலாம்.
கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கத்திலிருந்து புதுவை, கடலூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், நெல்லை, கோவைக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்து மட்டுமல்லாது சிறப்பு ரயில்களை இயக்கவும் போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ளது. tnstc app மற்றும் www.tnstc.in மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணிலும் 044-24749002, 044-2628 0445, 044-2628 1611 எண்களிலும் புகார் அளிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.