தலைநகர் டெல்லியில், பாரத் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை (16-02-26) அன்று ஏஐ உச்சி மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு வருகின்ற வெள்ளிக்கிழமை (20-02-26) வரை 5 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதோடு, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள், நிறுவனர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டுடன், ஏஐ தாக்கக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில், கூகுள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ யின் புதுமைகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.
இதையடுத்து, உலகின் முன்னனணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்டோர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். குறிப்பாக, சுந்தர்பிச்சை இந்தியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் ஆகியோர்களுக்கு பயன்படும் வகையில் ஏஐ தொழில் நுட்பத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தார். இந்த மாநாடு உலக அளவில் பல நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.
இருந்த போதிலும் சில சம்பவங்கள் மாநாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக டெல்லியில் நடைபெறும் ஏஐ கண்காட்சியில் உத்திரபிரதேச மாநிலத்தின் கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் சீனாவின் தயாரிப்பான ரோபோவை தங்கள் கண்டுபிடிப்பு எனக் காட்சிப்படுத்தியிருந்தது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. அதோடு, கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டிலிருந்து வெறியேறுவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அந்த பல்கலைக்கழகம் ரோபோவை காட்சிப்படுத்தப்படுத்தியிருந்த அதே அரங்கில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது, அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்றை கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் தங்களது தயாரிப்பு என்றும், இது இந்தியாவின் முதல் சாக்கர் ட்ரோன் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த ட்ரோன்கள் வணிக ரீதியாகவே தென்கொரியாவில் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், தற்போது இந்த சம்பவமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்பு சீனா, தற்போது கொரியாவா? உலகில் உள்ள அனைத்து புதுமைகளையும் கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் கடன் வாங்கி உள்ளது என்றும் விமர்சித்து வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/901-2026-02-19-11-34-00.jpg)
இது குறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர், "ஒரு தவறான விளக்கத்தின் மூலமாக இது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதாவது, நான் கூற வந்த கருத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. நான் மேலாண்மை தொடர்புத்துறையில் தான் ஆசிரியராக இருக்கிறேன், ஏஐ துறையில் அல்ல" என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்த ஆசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த மாநாட்டில் தெர்மாகோலால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/900-2026-02-19-11-33-18.jpg)