உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டம், தெஹ்பா கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ரீனா (இங்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் கருதி அவரது பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அருகே உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், செப்டம்பர் 23-ஆம் தேதி மாலை, வழக்கம்போல் பள்ளியை முடித்துவிட்டு, தனது வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

Advertisment

நகாஸ் காவல் நிலையப் பகுதியில் ரீனா நடந்து சென்றுகொண்டிருந்தபோது, முகத்தை மறைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் வந்த நிஷு திவாரி என்ற இளைஞர், திடீரென தனது கையில் வைத்திருந்த ஆசிடை அவரது முகத்தில் வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்தத் தாக்குதலில், ஆசிரியையின் முகம், கழுத்து மற்றும் உடல் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

Advertisment

உடனடியாக, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரீனாவை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆசிரியை ரீனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரீனாவிடம் வாக்குமூலம் பெற்று, வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். ஆனால், தாக்குதலை நடத்திவிட்டு, நிஷு திவாரி தலைமறைவாகியுள்ளார்.

இதனிடையே, பள்ளி ஆசிரியை மீது ஆசிட் வீசிய சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியது. உடனடியாக, சம்பால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், சிறப்புத் தனிப்படைகள் அமைத்து, நிஷு திவாரியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், செப்டம்பர் 25-ஆம் தேதி இரவு, நிஷு திவாரி கல்யாண்பூர் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படைக் காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், விரைந்து சென்ற போலீஸார், கிராமத்தில் பதுங்கியிருந்த நிஷு திவாரியைச் சுற்றி வளைத்தனர். அப்போது, காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, அங்கிருந்து நிஷு திவாரி தப்பித்தோட முயற்சித்திருக்கிறார்.

Advertisment

அதனால், தனிப்படைக் போலீஸார் நிஷு திவாரியை காலில் சுட்டு பிடித்தனர். அதையடுத்து, காலில் காயமடைந்த திவாரியை மீட்ட போலீஸார், கைது செய்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நிஷு திவாரி நீண்ட நாட்களாக ஆசிரியை ரீனாவைப் பின்தொடர்ந்து வந்தும், அவரை செல்போனில் தொடர்பு கொண்டும் தொந்தரவு செய்திருக்கிறார். இதுகுறித்து, ரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, ரீனாவின் தொடர் நிராகரிப்பால் ஆத்திரமடைந்த நிஷு திவாரி, சம்பவத்தன்று ஆசிடை வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்திருக்கிறது.

ரீனாவின் பெற்றோர், "எனது மகளுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையையே அழித்துவிட்டது," என்று கதறி அழுகின்றனர். இதனிடையே, நிஷு திவாரியின் செல்போனைக் கைப்பற்றிய போலீஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடர்ந்துள்ளனர்.

ரீனா புகார் கொடுத்தபோதே, சம்பந்தப்பட்ட காவல் நிலையக் போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த ஆசிட் தாக்குதல் தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாடியுள்ளனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்," என முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையும் அறிவித்துள்ளார்.