Unveiling of Kalingarayan statue in Erode - Farmers participate in large numbers Photograph: (erode)
நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் 1270 ஆம் ஆண்டு காளிங்கராயன் கால்வாயை வெட்டத் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் கழித்து கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறும் நீர் கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி அரக்கன் கோட்டை கால்வாய் அடுத்து கீழ்பவானி வாய்க்கால் தொடர்ந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் இந்த மூன்று விவசாய விளை நிலங்களில் பவானிசாகர் அணை நீரான பவானி ஆறு செல்கிறது. இந்த பவானி ஆறு ஈரோடு மாவட்டம் பவானி அருகே அணைக்கட்டு என்ற பகுதியில் நிறைவடைந்து அதன் உபரி நீர் கூடுதுறை காவிரி ஆற்றில் கலக்கிறது அப்படி பவானி நீர் காவிரி ஆற்றில் கலக்கும் இடத்திற்கு முன்பாக உள்ள அணைக்கட்டு பகுதியில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டது இதன் மூலம் பல ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பயனடைகிறது.
பவானி காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கிய கால்வாய் வெட்டும் பணி ஈரோடு வழியாக கொடுமுடி நொய்யல் ஆற்றில் முடிவடைந்தது. மொத்தம் 90 கிலோ மீட்டர் தொலைவில் காலிங்கராயன் கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாய் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் மஞ்சள், வாழை கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த காலத்தில் இந்த கால்வாயை வெட்டிய காலிங்கராயருக்கு ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் வெள்ளோடு ராசா கோவில் அருகே 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலிங்கராயர் சிலையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், சந்திரகுமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.காலிங்கராயர் சிலையின் கீழ் பகுதியில் காலிங்கராயர் வரலாறு குறித்த நூல்கள் மற்றும் போட்டி தேர்வில் பங்கு பெறுபவர்கள் பயன்படுத்தும் நூல்கள் அடங்கிய நூலகம் காலிங்கராயர் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "நதிகளை இணைக்கும் வகையிலும் இரண்டு அணைகளை கட்டி உள்ளார். இதேபோன்று யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நீர் வளத்தை அமைத்த காலிங்கராயன் மன்னருக்கு அவரது குலதெய்வமான ராசா கோவில் அருகே முழு திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் பற்றி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாட புத்தகத்தில் காலிங்கராயன் வரலாறு குறித்து இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.
Follow Us