தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரியகும்மனூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தால் அடக்கம் செய் அரசு 5 சென்ட் புறம்போக்கு இடத்தை வழங்கி உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பொது வழி பாதையை அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் வழிப்பாதை இல்லாமல் அருந்ததியர் சமூக மக்கள் 50 ஆண்டு காலமாக போராடி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் வழி பாதை கேட்டு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (02.102.2025) மதியம் பெரியகும்மனூர் பகுதியை சேர்ந்த வள்ளி என்ற 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். இவரது சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர். அப்போது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் மாவட்ட தலைவருமான முத்து தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து மூதாட்டியின் சடலத்தை ராயக்கோட்டை பஞ்சப்பள்ளி சாலையில் வைத்து நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அப்போதே பொதுவழி பாதையை ஆக்கிரமிப்பாளர் ராமமூர்த்தி இடமிருந்து இடத்தை அளந்து அத்துக்களித்து மீட்டுக் கொடுத்தனர். இதனையடுத்து மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்த ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகள் கனவை நினைவாக்கியதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தின் மாநில துணைத்தலைவரும் மாவட்ட தலைவருமான முத்துவை ஊர் பொதுமக்கள் தோளில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
Follow Us