தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வரும் நிலையில் தென்காசியின் பிரபல சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பரவலாக பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு மிகக் கனமழை காண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக். 20ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மற்றும் நாட்டுப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மாவட்ட மீனவ நல இயக்குநர் அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.