Union ministers who left due to Rahul Gandhi's actions at Interview in Parliament
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி சீன ஊடுறுவல் தொடர்பாகவும், அமெரிக்காவுடனான வர்த்தகம் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார். மேலும், அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டின் கோப்புகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால் எதற்கும் சபாநாயகர் அனுமதி கொடுக்காததால் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இன்று (11-02-26) கூட்டத்தொடரை முடித்து வெளியில் வந்த மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நிருபர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தனர். அதில், ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் முன் வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட ராகுல் காந்தி, அவர்கள் பேட்டி அளித்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து வாருங்கள் சேர்த்து பேட்டி கொடுப்போம் என்று தெரிவித்தார்.
உடனடியாக மத்திய அமைச்சர்கள் அங்கிருந்து நகர முற்பட்டனர். அப்போது அவர்களை அழைத்த ராகுல் காந்தி, “வாருங்கள்... ஒன்றாக நிற்போம்... வாருங்கள்... ஒன்றாகச் சேர்ந்து பேட்டி கொடுப்போம்” என்று அழைத்தார். ஆனால், அவர்கள் அதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us