Union Minister Suresh Gopi talks about resigning
மலையாள நடிகரான சுரேஷ் கோபி கடந்த மக்களவை தேர்தலில் கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே நபர் சுரேஷ் கோபி என்பதால், அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவியை மத்திய அரசு வழங்கியது. அதன்படி, அவர் அப்பதவியில் பொறுப்பு வகித்து வருகிறார்.
மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வந்தாலும், அவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. ஒட்டக்கொம்பன் படத்தில் நடிப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும், அதற்கு அவர் அந்த கடிதத்தை தூக்கி எறிந்ததாகவும் சுரேஷ் கோபி ஒரு நிகழ்வில் கூறியிருந்தார். மேலும் அவர், சினிமா என்னுடைய பேஷன் என்றும், நடிக்கக் கூடாது என்று எனக்கு அழுத்தம் வந்தால் என்னுடைய இணையமைச்சர் பொறுப்பில் இருந்து விலகவும் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக சுரேஷ் கோபி விருப்பம் தெரிவித்துள்ளார். கேரளாவின் கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சி.சதானந்தன் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் கோபி, “என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நான் நம்புகிறேன். பாஜகவின் இளைய உறுப்பினராக இருந்தபோதிலும், நான் அமைச்சராக நியமிக்கப்பட்டேன். கேரளாவிலிருந்து பாஜகவின் முதல் மக்களவை எம்.பி.யாக நான் பெற்ற மக்களின் ஆணையின் காரணமாக இது இருக்கலாம்.
தேர்தலுக்கு முன்பே தான் அமைச்சராக விரும்பவில்லை. நடிப்பில் தொடர விரும்பினேன். எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுவிட்டு அமைச்சராக வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை. நடிப்பு எனக்கு வருமானத்தைத் தருகிறது. மேலும் அந்த வருவாயைக் கொண்டு என் குடும்பத்தையும் மற்றவர்களையும் ஆதரிக்க விரும்புகிறேன். ஆனால் சமீப காலங்களில் எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.