Advertisment

“தமிழகத்திற்குத் தேவையான நிதிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது” - மத்திய அமைச்சர் பேட்டி!

dharmendra-pradhan

சென்னை ஐஐடியில் இன்று (21.09.2025) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை. அதற்கான காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “மத்திய அரசின் கல்வித்துறையில் இருந்து தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன திட்டங்களின் கீழ் நிதி வழங்க வேண்டுமோ அதனை மத்திய முழுமையாக வழங்கி வருகிறது. பி.எம். போஷன் எனும் மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கான நிதி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்த ஆண்டுக்கான நிதி கூட முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் சமக்ர சிக்ஷா உள்ளிட்ட சில திட்டங்களுக்கு மட்டும்தான் நிதி வழங்கப்படவில்லை. தமிழக அரசு ஏற்கனவே இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி நடந்துகொண்டால் உடனடியாக நிதி விடுவிக்கப்படும். ஆனால் தமிழக அரசு இதில் மட்டும் அதாவது சமம்கிர சிக்ஷா திட்டத்தில் மட்டும் அரசியல் செய்கிறது. மாநில அரசுக்கு மாணவர்களின் நலனைக் காட்டிலும் அவர்களின் அரசியல் முக்கியம் எனத் தமிழக அரசு கருதுகிறது. இருப்பினும் மாநில அரசிற்குத் தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கையில் முக்கிய பங்கு மாநில அரசுக்கு இருக்கிறது. 

உச்சநீதிமன்றம் இது தொடர்பாகத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது. மத்திய அரசும் அதற்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழியைத் தாண்டி அதிகமான மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. மத்திய அரசு முதல் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இருமொழிக் கொள்கையைத்தான் வலியுறுத்துகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகம் செய்கிறோம். இதில் மாநில மொழிக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 10% மக்கள் தான் ஆங்கில மொழியைப் பேசுகிறார்கள், கற்கிறார்கள். 

எனவே கூடுதலாக மாநில மொழிகளை அல்லது இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்கு மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் குறுகிய அரசியல் பார்வை உள்ளவர்கள் தான் இந்த விஷயத்தில் பிரச்சனையாக மாற்றுகிறார்கள். ஏற்கனவே தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திமுகவின் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் என்னை நேரடியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். எனவே மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான நிதிகளை வழங்கத் தயாராக இருக்கிறது. ஆனால் மாநில அரசு இதில் அரசியல் செய்யக்கூடாது” எனத் தெரிவித்தார்.

Advertisment
Chennai funds tn govt samagra Shiksha Scheme PM SHRI union minister dharmendra pradhan iit madras
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe