தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இனைந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் வரும் மார்ச் மாதம் 01ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்வது, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கான முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. 

Advertisment

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், வரும் 26ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க.  இடையேயான கூட்டணியில், கூட்டணி தொடர்பான ஒப்பந்தங்கள், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நடாளுமனற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்  கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில் கூடுதல் தொகுதியைக் கேட்டு பாஜக வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதோடு கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாகச் சென்னை அமைந்தகரையில் நடைபெற உள்ள தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் கலந்து கூறுகிறார். இந்த விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisment