Union Minister Ashwini vaishnaw request to the Tamil Nadu government Problem in land acquisition
2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று (01-02-26) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், நகரங்களை இணைக்கும் வகையில் மும்பை – புனே, புனே – ஹைதராபாத், ஹைதராபாத் – பெங்களூரு, ஹைதராபாத் – சென்னை, சென்னை – பெங்களூரு, டெல்லி – வாராணசி, வாராணசி – சிலிகுரி என 7 அதிவேக ரயில் பாதைகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று காணொளி வாயிலாக ரயில்வே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “இன்று, ஏழு புதிய அதிவேக வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஐந்து தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். இதனால், சென்னை-பெங்களூரு இடையே 1 மணி நேரம் 13 நிமிடங்கள் மட்டுமே பயணமாக மாறும். பெங்களூரு-ஹைதராபாத் இடையே 2 மணி நேரம் பயணம் மேற்கொள்ளப்படும். சென்னை-ஹைதராபாத் இடையே 2 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணம் மேற்கொள்ளப்படும்.
மும்பை-புனே 48 நிமிடங்கள் மட்டுமே பயணம் செய்யும், 1 மணி நேரத்திற்கும் குறைவான பயணமாக இருக்கும். புனே-ஹைதராபாத் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே பயணம் செய்யும். பின்னர் டெல்லியிலிருந்து வாரணாசிக்கும் பின்னர் வாரணாசியிலிருந்து பாட்னா வழியாக சிலிகுரிக்கும் வட இந்திய வழித்தடம் வருகிறது. டெல்லியிலிருந்து வாரணாசிக்கு வெறும் 3 மணி நேரம் 50 நிமிடங்கள் மட்டுமே ஆகும். வாரணாசி-சிலிகுரிக்கு வெறும் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 7,611 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட 9 மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து பெங்களூருவிற்கும், சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கும் புல்லட் ட்ரெயின் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தென்னிந்தியாவின் அதிவேக ரயில்வே திட்டமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 77 ரயில்வே நிலையங்கள் நவீன மயமாக்கப்பட இருக்கிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், சிதம்பரம், திருவண்ணாமலை, விருதாச்சலம் ஜங்ஷன், மன்னார்குடி, ஸ்ரீரங்கம் போன்ற ரயில் நிலையங்கள் அதிநவீனமாக மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களும் புணரமைக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 4,326 ஹெக்டேர் நிலங்கள் ரயில்வே துறைக்கு தேவைப்படுகிறது. இதில் மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைந்து ரயில்வே துறைக்கு நிலங்களை கையகப்படுத்த உதவ வேண்டும்” என்று கூறினார்.
Follow Us