தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சென்னை தியாகராய நகரில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (09.02.2026) நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது.
அதில், “தமிழகத்தில் இன்னும் 65 நாட்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. பேட்டி தருவது மட்டும் தான் கட்சியினுடைய பணியாக இருக்கக் கூடாது. சீனியர் தலைவர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்தந்த தொகுதியில் இருக்கும் நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும். சீனியர்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும்” என கட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/10/amit-shah-tn-mic-1-2026-02-10-10-49-15.jpg)
அதேபோல் தொகுதி பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் குறித்து விவாதிக்க தடை விதிக்கப்படுகிறது எனவும் பி.எல்.சந்தோஷ் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதோடு பா.ஜ.க.வில் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி (14.02.2026) சேலம் வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் சேலத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் சேலம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Follow Us