பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி நேற்று (07.01.2026) காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Advertisment

அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் இந்த ஆலோசனையானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகள் இடம்பெற உள்ளது, தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா தொகுதிப் பங்கீடு தொடர்பாக கறாராகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூட்டணியில் 56 தொகுதிகள் ஒதுக்கவும் ஆட்சி அமைந்தால் 3  அமைச்சர் பதவிகளை வழங்கவும் அமித்ஷா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

அதே சமயம் அதிமுக தரப்பில், பாஜகவிற்குக் கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இந்த முறை 25இல் இருந்து 30 சட்டமன்றத் தொகுதிகள் வரை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார்.

nainar-eps-mic

இது குறித்து நாளைக்கு எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்துப் பேசுவோம். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில், எங்களுடைய கூட்டணிக்குக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த நெருக்கடியும், யாரும் யாருக்கும் கொடுப்பது கிடையாது. நாங்கள் சுதந்திரமாகச் செயல்படுகிறோம். அதாவது தொகுதி எத்தனை என்பது முக்கியமில்லை. யார் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்பது முக்கியம்” எனப் பேசினார். 

Advertisment

முன்னதாக எடப்பாடி பழனிசாமியை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் சந்தித்து நாளை (09.01.2025) காலை 9 மணி அளவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளைக் கொண்டு வருவது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தி பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.