தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (22.08.2025)  மாலை நடைபெறவுள்ளது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று மாலை மத்திய அமைச்சர் அமித் வருகை தந்தார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வருகை தந்துள்ளார். திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் மாலை நடைபெறும் இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். 

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி திருநெல்வேலியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்ற பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அமித்ஷா, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில்,மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.