Union Cabinet meeting chaired by Prime Minister Modi at Delhi car blast incident
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த சம்பவத்தை என்ஐஏ, விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கார் வெடிப்புக்கு முன்னதாக நேற்று முன்தினம் (10/11/2025) நண்பகலில் ஹரியானாவில் உள்ள அல் ஃபலோ என்ற மருத்துவக் கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதில் அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மருத்துவர்கள் என தெரிந்தது. பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் டெல்லியில் மேலோங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவே செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியது.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ தீவிரமான விசாரணை நடத்தி வரும் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (12-11-25) நடைபெற்றது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
Follow Us