கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் நள்ளிரவில் நடந்த இருசக்கர வாகனத் திருட்டு சம்பவம், சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சுஜின், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல் ஆகஸ்ட் 8, 2025 அன்று இரவு, தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டியிருந்தார். ஆனால், நள்ளிரவில் நவீன உடையணிந்த இரண்டு மர்ம நபர்கள், வாகனத்தின் பூட்டை உடைத்து, அதைத் திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து, சுஜின், திருடப்பட்ட வாகனம் குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் திருடர்களைப் பிடிக்க தீவிர விசாரணை மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
Follow Us