நெல்லை மாநகர் பகுதியில் காவல் நிலையம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஒரே நாளில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று மாலை நான்கு மணியளவில் நெல்லை மாவட்டம் மாநகரப் பகுதியில் உள்ள தச்சநல்லூர் பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் தச்சநல்லூர் காவல் நிலையம் பகுதிக்கு வந்து பெட்ரோல் குண்டு வீசினர். அதனைத் தொடர்ந்து தாழையூத்து வாகன சோதனைச் சாவடிக்கு சென்ற அதே கும்பல் அங்கும் குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது அப்பொழுது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் மீண்டும் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபகுதியில் நேற்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்ததாகவும் அதில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரின் தம்பி தன்னுடைய ஆதரவாளர்களுடன் வந்து காவல் நிலையத்தை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசியதாக முதற்கட்ட தகவலாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.