ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இரு சொகுசு கார்கள் எதிர் எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தன. அப்போது இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கர விபத்தில் இரு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 

Advertisment

இதனையடுத்து மீட்கப்பட்டவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசலைச் சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது வேறு ஏதேனும்  காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Advertisment

இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற ஐயப்ப பக்தர்கள் காரும், கீழக்கரையில் இருந்து ஏர்வாடி நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.