திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள பூவன் கிழவன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (24). இவரது உறவினர், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி (22). இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், நேற்று (10.09.2025) பாலசுப்பிரமணியமும், புவனேஸ்வரியும் பூவன் கிழவன் பட்டியில் தங்கியிருந்து, இன்று காலை வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்குப் பணிக்குச் சென்றனர். செல்லும்போது, தனது இரு சக்கர வாகனத்தில், கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, திண்டுக்கலிலிருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், பொதுமக்கள் இருவரையும் மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்த பதபதப்பூட்டும் சிசிடிவி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.