Advertisment

ஈரான் குண்டு வீச்சில் இந்தியர்கள் இருவர் உயிரிழப்பு!

sky-light-ship

சுவிட்சர்லாந்த் நாட்டின் ஜெனீவா நகரில், ஓமன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்தான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஈரானில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. அதிலும், குறிப்பாகப் பலர் உயிரிழந்தனர். இதற்கிடையே ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 

Advertisment

அந்த வகையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எம்.வி. ஸ்கைலைட் என்ற எண்ணெய் மற்றும் ரசாயன டேங்கர் கப்பலில் பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த கேப்டன் ஆஷிஷ் குமார் மற்றும் ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தைச் சேர்ந்த தலிப் சிங் (வயது 24) ஆகிய இருவரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஓமன் நாட்டின் கசாப் துறைமுகம் அருகே நங்கூரமிடப்பட்டிருந்த 'ஸ்கைலைட்' கப்பல் மீது மார்ச் 1ஆம் தேதி காலை ஈரான் நடத்திய ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலில் கப்பல் தீப்பற்றியது. இந்த சம்பவத்தின் போது இந்த கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட மொத்தம் 20 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 4 பேர் காயமடைந்த நிலையில், மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அதே சமயம் எம்.கே.டி வியம் என்ற மற்றொரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திக்ஷித் சோலங்கி என்ற இந்திய மாலுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த மோதல்களில் மொத்தமாக இதுவரை 3 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். 

ministry-of-external-affairs

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், மாலுமிகளின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும் ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஹோர்முஸ் நீர்சந்தி பகுதியில் தற்போது நிலவும் போர் பதற்றம் மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக, 37 இந்தியக் கப்பல்கள் மற்றும் அதில் பணியாற்றும் 1,100க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் அந்தப் பகுதியிலேயே சிக்கித் தவிக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பாக மீட்கவும், இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்யவும் இந்தியக் கப்பல் உரிமையாளர்கள் சங்கம், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு, இதற்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறையையும் அமைத்துள்ளது. 

israel inicdent captain ship iran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe