தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இன்று (02.02.2026) காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
இந்நிலையில் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியை ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உள் அரங்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகப் பாடகர் வேல்முருகன், “தளபதி வாழ்க தளபதி வாழ்க...” என்ற பாடலை பாடி முடித்தார். .
அதன் பின்னர் பாடகர் வேல்முருகனுக்கு, விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வேல்முருகன் விஜய்க்குக் கடவுள் அறுபடை முருகன் படத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து விஜய் உங்கள் பாடலுக்கு நான் டான்ஸ் ஆடலாமா எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து பாடகர் வேல்முருகன், அவரது மகளுடன் சேர்ந்து விஜய் சிறிது நேரம் நடனம் ஆடினார். அதன் பின்னர் கலைக் குழுவினர் உடன் கைக் குலுக்கி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/tvk-vijay-dance-2026-02-02-12-26-24.jpg)
இந்நிகழ்வின் இறுதியில் விஜய் பேசுகையில், “தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதற்குக் காரணம் த.வெ.க.வினர் தான். கோடிக்கணக்கான மக்களும் இதற்கு மிக முக்கிய காரணம். இது தான் என்னுடைய மிக முக்கிய பலம் ஆகும். உங்களை நம்பி தான் நானும், கட்சியும் இருக்கிறோம். இதனை நான் சொல்லித் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அப்புறம் என்ன மைக்கை பிடித்தாச்சு. வெடியை கொளுத்திப் போட்டுவிடுவோமா?.
எம்.ஜி.ஆர்., 1977ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரேடியோவில் பேட்டியைக் கொடுத்தார். அதில் அவர் பேசும் போது, ‘பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன்’ எனத் தெரிவித்தார். அன்றைக்கு அந்த கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக’ என்று சொன்னார். அதே மாதிரி 2017க்கு பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலைமை பற்றி தமிழ்நாட்டு மக்கள் யோசித்துப் பார்த்தால், காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலைமையும் வந்துவிட்டது எனக் கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் தமிழக வெற்றிக் கழகம்” எனப் பேசினார்.
Follow Us