தமிழகத்தில் பிரபல மேடை பேச்சாளராக வலம் வரும் நாஞ்சில் சம்பத், தொடக்க காலத்தில் திமுகவில் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அதனை தொடர்ந்து, திமுகவில் இருந்து விலகி மதிமுக என்ற கட்சியை வைகோ ஆரம்பித்த போது அதில் நாஞ்சில் சம்பத்தும் இணைந்து கொண்டார். இதன் காரணமாகவும், வைகோ மீது தீவிர பற்று வைத்திருந்ததாலும் நாஞ்சில் சம்பத்துக்கு மதிமுகவில் பல்வேறு பதிவிகளை வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக பதவி பொறுப்பு வகித்து வந்த அவர், திடீரென அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர், எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அந்த வகையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இருப்பினும், திமுக அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து தன்னை தவெகவில் நேற்று (05.12.2025) இணைத்து கொண்டார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர், திரு. நாஞ்சில் சம்பத் தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.நாஞ்சில் சம்பத் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவர். பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us