சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்று (13/07/2025) போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனை ஒட்டி 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்துள்ளதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த லாக்-அப் மரணங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் முன்னெடுத்துள்ளது.

தற்போது போராட்ட மேடைக்கு விஜய் வந்த நிலையில் போராட்டமானது தொடங்கியுள்ளது. காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மேடையில் ஏற்றப்பட்ட நிலையில் போராட்டமானது தொடங்கியுள்ளது.