மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்திருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக பியூஷ் கோயலிடம், எடப்பாடி பழனிசாமி பட்டியல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் அதிமுக 170 இடங்கள், பாஜக 23 இடங்கள், பாமக 23 இடங்கள் மற்றவை (தேமுதிக 6 இடங்கள், அமமுக 6 இடங்கள், ஓ.பி.எஸ். 3 இடங்கள்) 18 இடங்கள்” என்று தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

அதே சமயம் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாஜகவே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளட்டும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை இனைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.  இத்தகைய பரபரப்பான் அரசியல் சூழலில் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

Advertisment

அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே  தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே திக்கு முக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய பழனிச்சாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய வரலாறு. இனிவரும் காலங்களில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒரே ஒற்றை சொல்லை நிறுத்தி வருகை புரிந்து ஆதரவு தந்த அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்” எனப் பேசினார். 

ops-meeting-speech

இந்நிலையில் த.வெ.க. மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக கூட்டணியில்  சேர மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.அவர் த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சி என்பது பெரும்பாலான  மாவட்டச் செயலாளர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். 

Advertisment

அந்த கருத்தின் அடிப்படையில் இரண்டு நாட்கள்  கொடுப்பது நல்ல முடிவுகள் மேற்கொள்வதாக இருக்கிறது. எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இணைத்துக் கொள்ளப் போவதில்லை. துரோகத்திற்கு என்றைக்கும் இடமளிக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருக்கிறார். ஆகவே விரைவில் நல்ல முடிவுகளை மேற்கொள்வார். காங்கிரஸ் கட்சி,  தமிழக வெற்றி கழகத்தில் கூட்டணி  சேர்வதற்கான வாய்ப்பு, அது போன்ற கருத்துக்கள் இப்போது இல்லை” எனப் பேசினார்.