மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினமே (19.08.2025) மதுரைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டுத் திடலுக்குத் தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். அதன்படி விடியற்காலையிலேயே சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வருகை தந்துள்ள தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில், “சீமான் ஒழிக... சீமான் ஒழிக...” என தவெக தொண்டர்கள் முழக்கமிட்டனர். முன்னதாக தவெக.வையும், அக்கட்சியின் தலைவர் விஜய்யையும், தொண்டர்களையும் மறைமுகமாகச் சீமான் கடுமையாகத் தாக்கி விமர்சித்திருந்தார். எனவே சீமானுக்கு த.வெ.க.வினர் இதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.