மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டுத் திடலுக்குத் தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர்.
அதே சமயம் அப்பகுதியில் கடுமையான வெயில், நிலவுகிறது. இதனால் 270க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். மற்றொருபுறம் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மருத்துவ முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் மாநாட்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதன்படி அங்குக் குழுமியுள்ள தொண்டர்கள் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.... வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கம் எழுப்பி வருகின்றனர். மாநாட்டுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு தொடங்கியது. மேலும் விஜய்யின் சினிமா பாடல்களும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் உற்சாகமாக பல்வேறு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அதில் கலை நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய் மேடைக்கு வர உள்ளார். அப்போது ரேம்ப் வாக் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்க உள்ளது.
இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் வழியில் பிரபாகரன் என்ற தொண்டர் சக்திமங்கலம் என்ற இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் இன்று 2வது மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.