மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினமே மதுரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி விடியற்காலையிலேயே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளதாக கூறப்ப்டுகிறது. அதே சமயம் அங்கு வருகை தந்துள்ள தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் இன்று 2வது மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.