தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகப் பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான மை டி.வி.கே, (MY TVK) செயலியை அக்கட்சி தலைவர் விஜய் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி (30.07.2025) வெளியிட்டார் இதற்கிடையே அக்கட்சியின் 2வது மாநாடு மதுரையில், தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாரப்பட்டி என்னும் இடத்தில் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி அதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 16ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இத்தகைய சூழலில் தான் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் 25ஆம் தேதி மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மாநாட்டை 25ஆம் தேதிக்கு முன்னர் நடத்திக் கொள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதில், ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதிக்குள் மாநாட்டை நடத்திக் கொள்ள போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு அகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அகஸ்ட் 21ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக் கேட்டு காவல்துறையிடன் த.வெ.க. சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2024) அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.