தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர, தே.மு.தி.க., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்த முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழ்லில் தான் அடுத்த கட்டமாக தேர்தல் பரப்புரைக்கு த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் நாளை (13.02.2026) சேலத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார் 

Advertisment

இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டியுள்ள  தனியார் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

tvk-vijay-kolkai-thalaivar-1
கோப்புப்படம்

கியூ. ஆர். (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment