வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisment

கரூர் துயர சம்பவத்திற்குப் பின் 1 மாதமாக எந்தவித மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தாத தவெக தலைவர் விஜய், அதன் பின்னர் புது பாய்ச்சலோடு புதுச்சேரி, ஈரோடு, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்பு மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். அண்மையில் வேலூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார்.  

Advertisment

இந்த நிலையில் அடுத்த பாய்ச்சலாக டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 2வது வாரத்தில் தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இடம் தேர்வு செய்த பிறகு, காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் விரைவில் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா மாவட்டத்தைத் தொடர்ந்து அடுத்து தென் மாவட்டத்தில் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.