தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி முடித்திருந்தார்.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாகத் தஞ்சாவூரில் தனது தனது தேர்தல் பரப்புரையை விஜய், இன்று (04.03.2026) மேற்கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் சார்பில் பூத் கமிட்டி பணிகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் களப்பணியாளர்கள் முன்பு விஜய் நேரடியாக உரையாற்றி அவர்களைத் தேர்தல் பணிக்குத் தயார் செய்வதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது. இதற்காகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. அதன்படி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை இக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்து 900 கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தஞ்சாவூர் மாவட்டக் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான பனையூரில் இருந்து புறப்பட்ட விஜய்யின் பரப்புரை வாகனம் நேற்று (03.03.2026) தஞ்சாவூரைச் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/tvk-anand-mic-2026-03-04-08-14-45.jpg)
இந்த கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவு குறியீடு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. விரைவு குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான விரைவு குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வகையிலான வாகனங்களிலோ பின்தொடர்வதை அறவே தவிர்த்திட வேண்டும். காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஊடகவியலாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேரலை இணைப்பு (Live Feed) வழங்க உள்ளதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் ட்ரோன்களுக்கு அனுமதி இல்லை.
Follow Us