தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் விஜய், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார். அதில், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத் தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்; இது நிஜம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “ஒரு குட்டிக் கதையில் இருந்து ஆரம்பிப்போம். பெரிய ஊர். அங்கு நான்கு சாலைகளும் ஒரே இடத்தில் சந்திக்கும் இடம் உள்ளது. அது ஆள் நடமாட்டம் உள்ள இடம் ஆகும். அதன் மத்தியில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்றுகொண்டுள்ளது. காலில் மண்ணை வீசிக் கொண்டும், சீறிக் கொண்டும் உள்ளது.
யாரும் காளையின் பக்கத்தில் செல்லமுடியாது. அந்த இடம் சாதாரணமாக மாற வேண்டும் என்றால் அந்த காளையை அடக்கி அமைதியாக்கினால் தான் சாதாரணமாக மாறும். அந்த ஊரில் உள்ள ஒரு சில பேருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். அவர்கள் யாரும் இல்லை. ஆனால் அங்கிருந்த கூட்டத்தில் இருந்த ஒரு சில பேர், ஏற்கனவே காளையை அடக்கியவர்களுடன் ஒரு சில பேர் எங்களுக்கு இல்லாத அனுபவமா?. நாங்கள் பார்க்காத காளையா?. நாங்கள் பார்க்காத மாடா?. நாங்கள் சென்று அடக்கிறோம் என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்கள். ஆனால் ஒருத்தராலும் காளையைத் தொடக் கூட முடியவில்லை. எல்லோரையும் அடித்துத் தூக்கி வீசி தூக்கிப் போட்டுவிட்டது.
அங்கிருந்தவர்கள் இப்போது என்ன செய்வது என்று யோசித்தபோது, அந்த கூட்டத்தை விலக்கிவிட்டு சின்ன பையன் எண்ட்ரி கொடுக்கிறான். அப்போது எங்களாலேயே முடியவில்லை. நீ எல்லாம் என்னத்தை கிழிக்கப் போகிறாய். எங்களுக்கு அவ்வளவு அனுபவம் உள்ளது. நாங்களே அடிப்பட்டு ஓரமாகப் படுத்துக் கிடக்கிறோம். இவன் விளையாட்டுத் தனமாக ஏதோ செய்துக் கொண்டிருக்கிறான். பாவம் காளைகிட்ட அடிப்பட்டுச் சாகப்போகிறான் என்று குறைத்து மதிப்பிட்டனர். ஏளனமாகப் பேசினார்கள். மற்றொருபுறம் பரிதாபப்பட்டு அய்யோ பாவமே என்று பேசுகிறார்கள். ஆனால் சின்ன பையன் எதையும் காதில் வாங்காமல் இரண்டு பாக்கெட்டிலும் கையை வைத்துக் கொண்டு ஸ்டைலா கெத்தா தில்லா உள்ளே செல்கிறான்.
ஒரு அடியை எடுத்து வைக்கிறான். அந்த காளை சீறிக்கொண்டிருக்கிறது. மற்றொரு அடியை எடுத்து வைக்கிறான். அப்போது காளை சீறிக்கொண்டு முன்னாள் வருகிறது. மக்கள் எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் மற்றொரு அடியை எடுத்து வைக்கிறான். அப்போது காளை அவனை முட்ட வரும்போது பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்திருந்த இரு புள் கட்டுகளைக் காளையிடம் காட்டுகிறான். காளை திடீரென நின்று புள் கட்டை சாப்பிட ஆரம்பிக்கிறது. அந்த சின்ன பையனும் காளையைத் தடவிக் கொண்டு வருகிறான். காளையும் ஒரு குழந்தை மாதிரி நடந்து வருகிறது. அதன் பின்னர் பக்கத்தில் இருந்த வயல்வெளியில் காளை மேயவிட்டு வருகிறான்.
அப்போது அடிப்பட்டுக் கிடந்த அனுபவசாலிகள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நக்கலும், நையாண்டியுமாக பேசுகிறார்கள். அவர்கள் தலையை குனிந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கே உள்ள ஒரு பெரியவர் இந்த பையனிடம் கேட்கிறார். எப்படிப்பா இப்படி ஒரு முரட்டுக்காளை சீறிக்கொண்டு இருக்கிறது எப்படி அந்த காளையை அடக்கினாய் என்று கேட்டார்.
அதற்கு அந்த பையன் சொன்னான். எனக்கு அந்த காளையைப் பார்த்தால் கோவமாக இருப்பது மாதிரி தெரியவில்லை. அந்த காளை பசியோடு இருப்பது போன்று தெரிந்தது. அதனால் தான் புல்லுக்கட்டைக் காண்பித்ததும், அதற்குத் தேவையானது கிடைத்துவிட்டது என்று சாப்பிட்டுவிட்டு ஜாலியாக வந்துவிட்டது என்று சொன்னார். இதற்கு பெரியவர் சொன்னாராம், சின்னவர்கள், பெரியவர்கள், அனுபவம் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்பது எல்லாம் விசயம் கிடையாது. யாராக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி செயல்பட்டு அந்த பிரச்சனையைத் தீர்க்கிறான் அது தான் விசயம் என்றார். இந்த கதையில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழக அரசியல் களம் அந்த பெரியவர் தான் தமிழக மக்கள் அந்த சிறுவன் தான் தமிழக வெற்றிக் கழகம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/vlr-tvk-vijay-2026-02-23-13-19-11.jpg)