TVK leader vijay speech at christmas function organized by Tvk
தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா இன்று (22-12-25) கொண்டாடப்பட்டது. தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்ற இவ்விழாவில் 40 கிலோ கேக்கை வெட்டி 11 குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், “இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம். அன்பும் கருணையும் தானே எல்லோருக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்கும் மனசு தான் தாய் மனசு. நம் தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட மண், தாய் அன்பு கொண்ட மண். ஒரு தாய்க்கும் எல்லாப் பிள்ளைகளும் ஒன்று தான். அதனால், பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லாப் பண்டிகைகளும் சந்தோஷமாக பகரும் ஊர் தான் நம்ம ஊர். இங்கு வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும், நாம் எல்லோரும் சகோதரர்கள் தான். அதனால் நாம் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். ஏனென்றால், உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களுடைய நம்பிக்கையை மதிக்க சொல்லித் தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும், எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்கு,
அதுமட்டுமல்லாமல் அப்படிப்பட்ட நம்பிக்கையை சொல்வதற்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கிறது. அதில் குறிப்பாக ஒரு கதையை சொல்கிறேன். ஒரு இளைஞனுக்கு எதிராக தன்னோடு சகோதரர்களே பொறாமைப்பட்டு அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டனர். அதில் இருந்து மீண்டு வந்து அப்புறம் அந்த நாட்டுக்கே அரசன் ஆகி தனக்கு துரோகம் செய்த சகோதரர்களுக்கு மட்டுமல்ல அந்த நாட்டையே எப்படி காப்பாற்றினான் என்பது போன்ற கதை நிறைய இருக்கிறது. குறிப்பிட்ட கதை, யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. கடவுளுடைய அருளும் மக்களை மானசீகமாக நேசிக்கிற அன்பும், அதீத வலிமையும் அதற்கான உழைப்பும் இருந்தாலே போதும் எவ்வளவு பெரிய போராட்டத்தையும் எதிரிகளையும் ஜெயிக்கலாம் என்பதை தான் இந்த கதைகள் எல்லாம் உணர்த்துகிறது.
இந்த விழாவில் நான் ஒரு உறுதியை கொடுக்கிறேன். நாமும், நம்முடைய தமிழக வெற்றிக் கழகமும் சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்தவிதமான சமரசமும் இருக்காது. அதனால் நம்முடைய கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என்று பெயர் வைத்ததே இந்த உறுதியினால் தான். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைத்து புகழும் எல்லாவல்ல இறைவனுக்கே” என்று பேசினார்.
Follow Us