புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் காரைநகர் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் கைது செய்தனர். அதோடு மீனவர்களின் இரு விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான 25 மீனவர்கள் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையானது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/tvk-vijay-angry-2026-02-16-13-05-02.jpg)
மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா?. இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us