சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கானது மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து, த.வெ.க தலைவர் விஜய் இன்று (12-07-25) சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். காவலில் இறந்தோரின் குடும்பத்தினர் 18 பேரிடம் தனித்தனியாக விஜய் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.

அவர்களிடம், ‘உங்களுக்கு நியாயமும் தீர்ப்பும் வாங்கித்தர வேண்டியது எனது கடமை. மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற தவெக முயற்சிக்கும். வழக்குகளின் செலவை தவெக முழுமையாக ஏற்கும்.’ என்று விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை (13-07-25) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அக்கட்சி போராட்டம் நடத்த உள்ள நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் காவல் துறை விசாரணையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை விஜய், சந்தித்து ஆறுதல் கூறி நாளை நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.