தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது
இதற்கிடையே தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி விருகம்பாக்கம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடியில் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று (22.02.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில், “பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும்” எனத் தெரிவித்தார். அதோடு அந்த தீர்மானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அந்த தீர்மானத்தை வழிமொழிந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவது என விஜய் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us