தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துகள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்களை விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் மதியழகன் இந்த பிரச்சார நிகழ்ச்சி முடிந்த உடனே அவர் தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு மதியழகன் தான் அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மதியழகனை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாகத் தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், நேற்று முன்தினம் இரவு முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us