தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதோடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க.வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக மதியழகன் இந்த பிரச்சார நிகழ்ச்சி முடிந்த உடனே அவர் தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு மதியழகன் தான் அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் மதியழகனை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாகத் தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டதாகவும், நேற்று இரவு முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் ஆகியோரின் செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.